தமிழ்நாட்டில் புதிதாக 7 நர்சிங் கல்லூரிகள்: கூடுதல் இடங்கள் உருவாக்கம்

ஏற்கெனவே உள்ள அரசு நர்சிங் கல்லூரிகள் மற்றும் நர்சிங் பள்ளிகளில் 1,925 கூடுதல் இடங்கள் உருவாக்கப்படுகின்றன.
AI
AI
Published on

சென்னை,

தமிழகத்தில் புதிதாக 7 நர்சிங் கல்லூரிகளை தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கூடுதல் மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் 2014-ம் ஆண்டுக்குப் பிறகு புதிய அரசு நர்சிங் (செவிலியர்) கல்லூரிகள் தொடங்கப்படாததால், செவிலியர், மருந்தியல் மற்றும் துணை மருத்துவப்படிப்புகளில் ரூ.351 கோடியில் ஆயிரக்கணக்கான கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை உருவாக்கும் அறிவிப்பை முதல்-அமைச்சர் விஜய் சட்டசபையில் வெளியிட்டார்.

புதிய அரசு நர்சிங் கல்லூரிகள்

அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணைகளில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல், திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரிகளில், தலா 100 பி.எஸ்சி செவிலியர் மாணவர் சேர்க்கை இடங்களுடன் 6 புதிய அரசு நர்சிங் கல்லூரிகள் உருவாக்கப்படுகின்றன. இதற்கான ரூ.270.26 கோடி செலவீனம் முழுவதும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக நிதியிலிருந்தே ஏற்கப்படுகிறது. அந்தந்த மருத்துவக் கல்லூரிகளில் தற்போதுள்ள இடவசதியில் 600 இடங்களுக்கும் நடப்பு கல்வியாண்டிலேயே மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படும்.

கூடுதல் இடங்கள்

அதேபோல், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 60 பி.எஸ்சி செவிலியர் இடங்களுடன் 7-வது புதிய அரசு நர்சிங் கல்லூரியும் தொடங்கப்படுகிறது. ஏற்கெனவே உள்ள அரசு நர்சிங் கல்லூரிகள் மற்றும் நர்சிங் பள்ளிகளில் 1,925 கூடுதல் இடங்கள் உருவாக்கப்படுகின்றன.

அதாவது டி.ஜி.என்.எம்.படிப்பில் 1,290 இடங்கள், பி.எஸ்சி நர்சிங் படிப்பில் 440 இடங்கள், எம்.எஸ்சி நர்சிங் படிப்பில் 75 இடங்கள் மற்றும் பட்டப்படிப்புக்கு பிந்தைய பி.எஸ்சி. நர்சிங் படிப்பில் 120 இடங்கள் என மொத்தம் 2,585 கூடுதல் நர்சிங் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படுகின்றன. அதே போல், 12 துணை மருத்துவப் படிப்புகளில் 2,788 கூடுதல் இடங்கள், மருந்தியல் படிப்புகளில் 735 கூடுதல் இடங்கள் உருவாக்கப்படுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com