விபத்தை ஏற்படுத்தும் சாக்கடை கால்வாய்

சிவகங்கை நகரில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள சாக்கடை கால்வாயில் பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விபத்தை ஏற்படுத்தும் சாக்கடை கால்வாய்
Published on

சிவகங்கை நகரில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள சாக்கடை கால்வாயில் பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கழிவுநீர் கால்வாய்

சிவகங்கை நகரின் முக்கிய வீதியாக இருப்பது தெற்கு ராஜ வீதி. இங்கு வங்கிகள், மருந்து கடை, மரக்கடை, பெயிண்டு கடை, எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்கும் கடை, அச்சகம், ரேஷன் கடை உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் செயல்படுகிறது. மேலும் இப்பகுதி ஒரு வழி போக்குவரத்து வீதியாகவும் உள்ளது. இதனால் இந்த வீதியில் எப்போதுமே மக்கள் நடமாட்டம் இருக்கும்.

நகரின் மைய பகுதியான சிவன் கோவில் பகுதியில் இருந்து இந்த வீதியை இணைக்கும் புதுத்தெரு உள்ளது. இப்பகுதி வழியாகத்தான் காந்தி வீதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீர் கால்வாய்களும் செல்கின்றன.

ஆபத்து

இந்நிலையில் தெற்கு ராஜவீதி மற்றும் புதுத்தெருவை இணைக்கும் இடத்தில் சாக்கடை கால்வாய் அருகில் உள்ள பாலம் உடைந்து விழுந்துவிட்டது. இதனால் சாக்கடை கால்வாய் திறந்த நிலையில் காணப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் கழிவு நீர் கால்வாய் நிரம்பி தண்ணீர் தெருக்களில் ஓடியது.

அப்போது இந்த வழியில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பாதை தெரியாமல் கழிவு நீர் கால்வாயில் தவறி விழுந்த சம்பவம் நடந்தது. அவரை தீயணைக்கும் படையினர் மீட்டனர். இதனால் இந்த பாதை இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. எனவே, இங்கு புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com