

சென்னை,
தவெக கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை... இது நாடா.. சுடுகாடா..?
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே 7 வயது பிஞ்சு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடூர நிகழ்வு கண்கலங்க வைக்கிறது.
வீட்டுக்கு வெளியே மகிழ்ச்சியாக துள்ளிக் குதித்து விளையாடிய அப்பாவி சிறுமியை வேட்டையாடியிருக்கிறது ஒரு ஆபாச மிருகம்.! திமுக ஆட்சியில் பாலியல் குற்றவாளிகளுக்கு சுத்தமாக பயம் இல்லாமல் போய்விட்டது. இதற்கு காரணம் காவல் துறை இயங்கும் லட்சணம் தான்.
சின்னக் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாருக்குமே பாதுகாப்பு இல்லாத ஒரு அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரித்து தண்டனை வாங்கி கொடுக்க வேண்டிய காவல்துறை, தூங்கிக் கொண்டிருக்கிறது. கண்ணாடியை பார்த்து நீங்களே ஒரு முறை கேட்டுக் கொள்ளுங்கள் மனசாட்சியோடு ஆட்சி நடத்துகிறோமா? இல்லையா? என்று....
பிஞ்சு சிறுமிகளை வேட்டையாடும் பாலியல் குற்றவாளிகளுக்கு நீங்கள் வாங்கிக் கொடுத்த தண்டனை விபரங்கள் என்னென்ன என்பதை அறிவிக்க முடியுமா முதல்-அமைச்சர் அவர்களே?
போதைப் பொருள் கலாசாரத்தை ஒழிக்காமல் எப்படி குற்றங்கள் குறையும்? ஆட்சிக்கு அவப்பெயர் வரும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட முதல்-அமைச்சருக்கு இல்லை என்பது அவருடைய மெத்தனத்திலேயே உறுதியாக தெரிகிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் என்னுடைய குடும்பம் மாதிரி என வசனம் பேசும் முதல்-அமைச்சர், தன் குடும்பத்தில் இப்படி அநீதி நடக்க விட்டிருப்பாரா? நடந்தால் சும்மாதான் இருந்திருப்பாரா?
இந்த கையாலாகாத ஆட்சியை விரைவில் மக்கள் தூக்கி எறிய போகிறார்கள்.என தெரிவித்துள்ளார்.