

திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டத்தில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு சிதம்பரம்(எ) நடசேன் (வயது 63) என்பவர் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அப்போதைய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கோகிலா புலன் விசாரணை மேற்கொண்டு மேற்சொன்ன முதியவரை கைது செய்தார்.
புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அந்த முதியவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி சுரேஷ்குமார் நேற்று (29.6.2026) மேற்சொன்ன குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் அவர், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை நடைபெற, சிறப்பாக கண்காணிப்பு செய்த ஏ.டி.எஸ்.பி. சண்முகம் (CWC), சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ் மற்றும் சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகிலா (தற்போது திருநெல்வேலி மாநகரம் JAPU) மற்றும் வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு துர்காதேவி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 13 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 13 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் 1 குற்றவாளிக்கு மரண தண்டளையும், 3 குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டளையும், 2 குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 1 குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.