3 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு தூக்கு தண்டனை - நெல்லை கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

கடந்த 2023-ம் ஆண்டு, இவர் 6, 7 மற்றும் 8 வயதுடைய 3 சிறுமிகளை மிரட்டி ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
3 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு தூக்கு தண்டனை - நெல்லை கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
Published on

நெல்லை,

நெல்லை மேலப்பாளையம் குறிச்சி அருகே உள்ள அழகிரிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் சேகர் (வயது 41). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இவர் கடந்த 2023-ம் ஆண்டு 6, 7 மற்றும் 8 வயதுடைய 3 சிறுமிகளை மிரட்டி வீட்டிற்குள் அழைத்து சென்று ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்தார்.

இந்த கொடூர சம்பவத்தை வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என அந்த சிறுமிகளை ஆனந்த் சேகர் கடுமையாக மிரட்டினார். இதனால் பயந்து போன சிறுமிகளின் அன்றாட நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தெரிந்தது. இதை கவனித்த பெற்றோர்கள் அவர்களிடம் அன்பாக விசாரித்தனர். அப்போது தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தை சிறுமிகள் கண்ணீருடன் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், பாளை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்த் சேகரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் தொடர்ந்து நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சுரேஷ்குமார் இன்று தீர்ப்பு அளித்தார். அவர் தனது தீர்ப்பில், பிஞ்சு குழந்தைகளுக்கு கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்த ஆனந்த் சேகருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளுக்கும் அரசு சார்பில் தலா 7 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரி வித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உஷா வாதாடினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com