ஓடும் ரெயிலில் இளம்பெண்ணிடம் சில்மிஷம்: வடமாநில வாலிபர் கைது

இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வடமாநில வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.
ஓடும் ரெயிலில் இளம்பெண்ணிடம் சில்மிஷம்: வடமாநில வாலிபர் கைது
Published on

சேலம்,

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பீகார் மாநிலம் பாட்னாவிற்கு கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-06085) இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இந்த ரெயிலில் எஸ்-6 முன்பதிவு பெட்டியில் மேற்கு வங்காளம் மாநிலம் ஜல்பைக்குரி பகுதியை சேர்ந்த 28 மற்றும் 22 வயது கொண்ட அக்காள்-தங்கை பாலக்காடு ரெயில் நிலையத்தில் இருந்து பயணம் செய்தனர். இவர்கள் இருந்த இருக்கையின் அருகில் மற்றொரு இருக்கையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இருந்துள்ளார்.

இந்த ரெயில் திருப்பூர் பகுதியில் வந்தபோது, அந்த வாலிபர் திடீரென 22 வயது இளம்பெண்ணுக்கு இடுப்பு மற்றும் உடல் பகுதிகளில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், அந்த வாலிபரை கண்டித்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதையடுத்து உடனே ஆன்லைன் மூலம் ரெயில்வே போலீசில் சம்பந்தப்பட்ட பெண் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்ததும், சம்பந்தப்பட்ட பெட்டிக்கு சேலம் ரெயில்வே போலீசார் சென்று விசாரித்தனர்.

அப்போது, ரெயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதையடுத்து அந்த பெண்ணிடம் முறையாக புகார் பெற்று விசாரணை நடத்தினர்.

இதில், அந்த வாலிபர் பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தை சேர்ந்த முன்னாகுமார் (வயது 32) என்பது தெரியவந்தது. அவர் மீது பாலியல் தொல்லை கொடுத்தது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட வாலிபரை சேலம் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com