சிறுவனுக்கு பாலியல் தொல்லை; காவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சீரழிந்து கொண்டிருக்கும் சட்டம் ஒழுங்கின் மீது கூடுதல் கவனம் செலுத்திட வேண்டுமென டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சிறுவனுக்கு பாலியல் தொல்லை; காவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
Published on

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னை கோடம்பாக்கம் அருகே 16 வயது சிறுவனுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்த தலைமைக் காவலர் கைது - குற்றங்களைத் தடுக்க வேண்டியவர்களே குற்றச் செயல்களில் ஈடுபட்டால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எப்படி சீரானதாக இருக்கும் ?

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் 16 வயது சிறுவனின் வாயில் மதுவை ஊற்றி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தலைமைக் காவலர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்புமிக்க காவல்துறையில் பணியாற்றும் காவலரே இத்தகைய மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்டிருப்பது ஒட்டுமொத்த காவல்துறைக்கும் பெரும் இழுக்கை உண்டாக்கியுள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் காவல் அதிகாரிகளுடன் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களும், அதிகாரிகளுக்கு அவர் போடும் உத்தரவுகளும் துளியளவும் செயல்பாட்டிற்கு வருவதில்லை என்பதை அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களே சாட்சியாக அமைந்துள்ளன.

எனவே, தன்னுடைய பொறுப்பையும் கடமையையும் மறந்து சிறுவனுக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகக் கைதாகியிருக்கும் தலைமைக் காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் சீரழிந்து கொண்டிருக்கும் சட்டம் ஒழுங்கின் மீது கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com