

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஆவுடையானூரை சேர்ந்தவர் முருகன் மகன் திவாகர் (வயது 30). இவர் கடந்த 2017-ம் ஆண்டு 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் திவாகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட திவாகருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உஷா ஆஜரானார்.