

விழுப்புரம்
மாணவிக்கு பாலியல் தொந்தரவு
விழுப்புரம் அருகே உள்ள காணை பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவி, அதே கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே கிராமத்தை சேர்ந்தவர் ராஜன் மகன் அந்தோணிராஜ் (25). சரக்கு வாகன டிரைவரான இவர், கடந்த சில மாதங்களாக அந்த மாணவியை பின்தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி தொந்தரவு செய்துள்ளார். சம்பவத்தன்று அம்மாணவியை அந்தோணிராஜ், பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
டிரைவர் கைது
இதுகுறித்து அம்மாணவி, அழுதுகொண்டே வந்து தனது பெற்றோரிடம் சென்று நடந்த சம்பவத்தை பற்றி கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், இதுபற்றி விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் அந்தோணிராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.