

திரு.வி.க நகர்,
அரசு பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜி.எஸ்.டி. ஆய்வாளர் கைது செய்யப் பட்டார்.
சென்னை முகப்பேர் 2-வது பிரதான சாலையில் ஜி.எஸ்.டி. அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ஆந்திராவை சேர்ந்த 32 வயதுள்ள இளம்பெண் ஒருவர் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இதே அலுவலகத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சவுரவ் (வயது 28) என்பவரும் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், சவுரவ் கடந்த சில நாட்களாக பெண் ஆய்வாளரிடம் பாலியல் ரீதியாகவும், இரட்டை அர்த்தத்திலும் பேசி தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்த பெண் ஆய்வாளரின் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைத்தளங் களில் பதிவிட்டதுடன், உயர் அதிகாரிகளுடன் அவரை தொடர்புபடுத்தி தகாத வாசகங்களையும் பதிவிட்டு வந்ததாகவும் தெரிகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஆய்வாளர், சம்பவம் குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் விசாரணை மேற் கொண்டனர். விசாரணையில், பெண் ஆய்வாளருக்கு சவுரவ் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஜி.எஸ்.டி. ஆய்வாளர் சவுரவ் மீது பெண் வன்முறை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார். அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.