

மிரட்டல்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மருதன் (வயது 38). கொத்தனார். திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் 15 வயது சிறுமியை தன்னுடன் பேசி பழகுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு அந்த சிறுமி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மருதன், தன்னுடன் பழகவில்லை என்றால், கையை பிளேடால் அறுத்துக்கொண்டு இறந்து போவேன் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அந்த சிறுமி, மருதனுடன் அவ்வப்போது பேசியுள்ளார்.
சில நாட்களுக்கு பின்பு, அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்தார். இதனால் மருதனுடன் பேசுவதை சிறுமி நிறுத்தியுள்ளார். ஆனாலும் அவர் விட்டுவிடாமல், தன்னுடன் பழகுவதை நிறுத்தினால் பெற்றோரை கொலை செய்து, உனக்கு திருமணம் நடக்கவிடாமல் செய்துவிடுவேன் என தொடர்ந்து மிரட்டியுள்ளார்.
ஜெயில்
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீசார் கடந்த 2020-ம் ஆண்டில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து, மருதனை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அப்போது மருதனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முத்துகுமரவேல் நேற்று தீர்ப்பளித்தார்.