தீயணைப்பு ஆணைய தலைவராக சங்கர் ஜிவால் நியமனம்

ஓய்வு பெற உள்ள நிலையில், சங்கர் ஜிவாலை தீயணைப்புத்துறை தலைவராக நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை,
தீயணைப்பு ஆணையத் தலைவராக டிஜிபி சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தீராஜ்குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சங்கர் ஜிவால் நாளை மறுநாளுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், அவருக்கு புதிய பொறுப்பானது அளிக்கப்பட்டுள்ளது.
சுமார் 35 ஆண்டு கால காவல் துறை அனுபவத்தில் அவர் சிறப்பாக பணி செய்துள்ள சங்கர் ஜிவாலின் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இந்த முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. காவல் துறை ஆணையம் போல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு புதிய ஆணையம் ஒன்றை ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது.
அடிக்கடி பட்டாசு விபத்துகள் ஏற்பட்டு பெரும் பொருள் இழப்புகள் மட்டுமல்லாமல் ஏராளமான உயிர் இழப்புகளையும் தமிழகம் சந்தித்து வருகிறது. இப்படியான விபத்துகள் மற்றும் பேரழிவு தீ விபத்துகளை முற்றிலும் தடுப்பதற்கு தேவையான வழிமுறைகளை இந்த ஆணையம் வழங்கும்.
அதை அடிப்படையாக வைத்து புதிய கொள்கை முடிவு எடுக்கப்பட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயங்கும். அதுமட்டுமல்லாமல் தீயணைப்பு துறைக்கு தேவையான காலத்துக்கு ஏற்ப மேம்பட்ட நவீன உபகரணங்கள், கருவிகள் வாங்குவது தொடர்பாகவும் இந்த ஆணையம் ஆலோசனைகள் வழங்கும்.






