சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சேகர் ரெட்டி உள்ளிட்ட 3 பேருக்கு ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி உள்ளிட்ட மூன்று பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சேகர் ரெட்டி உள்ளிட்ட 3 பேருக்கு ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது
Published on

சென்னை,

சென்னையை சேர்ந்த மணல் காண்டிராக்டரான சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையின் போது வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.140 கோடி பணம் சிக்கியது. இதில் 2 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுகளும் இருந்தன. இது தொடர்பாக சேகர் ரெட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேபோல் இவரது கூட்டாளிகள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு பணம் மற்றும் ஏராளமான தங்கம் கைப்பற்றப்பட்டது. சேகர் ரெட்டியைத் தொடர்ந்து அவரது கூட்டாளிகளான சீனிவாசலு, பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், முத்துப்பேட்டை ராமச்சந்திரன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமாக ரூபாய் நோட்டுக்களை மாற்றியதாக சேகர் ரெட்டி மீதும், அவரது கூட்டாளிகள் மீதும் சி.பி.ஐ. போலீசார் மற்றும் மத்திய அரசின் அமலாக்கப்பிரிவு சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர் சிபிஐ காவலில் இருந்து வெளிவந்த மூன்றாவது நாளில், சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் 3 பேரையும் அமலாக்க பிரிவினர் கைது செய்தனர். இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி உள்ளிட்ட மூன்று பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவாதம் செலுத்தி ஜாமீன் பெறலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். டெல்லி அமலாக்கப் பிரிவில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் ராமச்சந்திரன் மற்றும் ரத்னம் ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com