காப்பகத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை: 28 வயது இளம்பெண் போக்சோவில் கைது

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தையை இழந்து தாயால் கைவிடப்பட்ட 3 குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
காப்பகத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை: 28 வயது இளம்பெண் போக்சோவில் கைது
Published on

தேனி,

போடி அருகே குழந்தைகள் காப்பகத்தில் 10 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம்பெண்ணை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் போடி அருகே தருமத்துப்பட்டியில் குழந்தைகள் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் தாய், தந்தையை இழந்த குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு போடி அருகே உள்ள பல்லவராயன்பட்டியை சேர்ந்த வரதராஜன் மனைவி முனீஸ்வரி (வயது 28) என்பவர் நிர்வாகியாக இருந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தையை இழந்து தாயால் கைவிடப்பட்ட 3 குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். அதில் 10 வயது சிறுவன் இந்த காப்பகத்தில் தங்கி சில்லமரத்துப்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சிறுவனுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் சிறுவனிடம் விசாரித்தார். அப்போது காப்பக நிர்வாகி முனீஸ்வரி தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுவன் கூறினான். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர் தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விஜயலட்சுமியிடம் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் அதிகாரிகள் காப்பகத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுவனுக்கு, காப்பக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து அதிகாரிகள் போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் முனீஸ்வரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து , அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com