

நாகப்பட்டினம்,
நாகை நீலா வடக்கு வீதியை சேர்ந்தவர் ராம்பிரசன்னா. இவருக்கு சொந்த மான இடம் நாகை காடம்பாடி புதிய கடற்கரைக்கு செல்லும் சாலையில் உள்ளது. இந்த இடத்தில் தற்போது வீடு கட்டுவதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டியபோது 2 அடி உயரத்தில் சிவன், பார்வதி மற்றும் சிறிய சோமாஸ்கந்தர் சிலைகள் ஒன்றாக ஒரே மேடையில் அமர்ந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. மேலும் 2 அடி உயரம் கொண்ட நடராஜர் சிலை மற்றும் திருவாச்சியும் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்து போலீசார், சாமி சிலைகளை பார்வையிட்டனர். பின்னர் அந்த சிலைகள் நாகை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப் பட்டது. இந்த சாமி சிலைகள் ஐம்பொன்னால் ஆனது எனவும், 8 அல்லது 9-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால சிலைகள் எனவும் தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.