ஆவடியில் மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை

உடல் நலக்குறைவால் மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆவடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆவடியில் மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை
Published on

ஆவடி பக்தவச்சலபுரம் ஜோதிராமலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் தணிகைவேல் (வயது 45). இவர், தன்னுடைய தந்தை முத்துவீரன் (77), தாய் சரோஜினி (64) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சரோஜினி, நேற்று முன்தினம் இரவு தனது அறையில் உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துவீரன், மனைவி இறந்த துக்கம் தாங்காமல் வீட்டின் கூரையில் இருந்த இரும்பு குழாயில் மனைவியின் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று அதிகாலை தணிகைவேல் தனது பெற்றோர் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்தார். அப்போது தனது தாய் படுக்கையில் இறந்து கிடப்பதையும், தந்தை தூக்கில் பிணமாக தொங்குவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஆவடி போலீசார் முத்துவீரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உடல் நலக்குறைவால் மனைவி உயிரிழந்த துக்கம் தாங்காமல் கணவர் தற்கொலை செய்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com