தவறி விழுந்த இளம்பெண்.. தரையில் கிடந்த ஊசி இதயம் வரை புகுந்ததால் அதிர்ச்சி


தவறி விழுந்த இளம்பெண்.. தரையில் கிடந்த ஊசி இதயம் வரை புகுந்ததால் அதிர்ச்சி
x
தினத்தந்தி 26 Aug 2025 1:03 PM IST (Updated: 26 Aug 2025 2:27 PM IST)
t-max-icont-min-icon

பரணில் இருந்த பொருட்களை எடுத்தபோது இளம்பெண் தவறி விழுந்தார். அப்போது தரையில் கிடந்த ஊசி குத்தி, அவரது இதயம் வரை புகுந்தது.


நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த 18-ந்தேதி, தன் வீட்டில் பரணியில் உள்ள பொருட்களை எடுத்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் தவறி விழுந்துவிட்டார். அப்போது தரையில் கிடந்த ஊசி அவரது நெஞ்சில் குத்தி புகுந்தது. அப்போது அவருக்கு எந்த வலியும் இல்லாமல் இருந்ததால், அதற்கு அவர் சரிவர மருத்துவ சிகிச்சை பெறவில்லை.

2 நாட்கள் கழித்து அவருக்கு லேசான மூச்சுதிணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதற்காக அவர், நாகப்பட்டினத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் 20-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், நெஞ்சின் வழியே இதயம் வரை ஊசி குத்தி இருந்தது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 21-ந்தேதி அனுமதித்தனர். மதுரை அரசு ஆஸ்பத்திரியின் இதய அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரை மீண்டும் பரிசோதித்தபோது, இதயத்தில் ஊசி குத்தி இருந்ததும், அதனால் இதயத்தை சுற்றி நீர் நிரம்பி இருந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து டீன் அருள் சுந்தரேஷ்குமார் ஆலோசனையின் பேரில், மருத்துவ குழுவினர், பெண்ணின் உடலில் இருந்து ஊசியை, அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர். அதன்படி அறுவை சிகிச்சை செய்து ஊசியை அகற்றி அப்பெண்ணை காப்பாற்றினர்.

இதுகுறித்து அரசு டாக்டர்கள் கூறுகையில், “தவறி விழுந்த அந்த பெண்ணுக்கு ஊசி குத்தியது பற்றி முதலில் தெரியவில்லை. உடலில் பல இடங்களில் வலி இருந்ததால், அந்த வலியையும் அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னரே, இதயத்தில் குத்தியது துணி தைக்கும் ஊசி என்று தெரியவந்தது. அது சுமார் 5 செ.மீ. நீள ஊசி ஆகும். அந்த ஊசியை அறுவை சிகிச்சை செய்து அகற்றி உள்ளோம்.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் இந்த அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது அந்த பெண், எந்தவித பக்க விளைவும் இன்றி நலமாக இருக்கிறார். உள்நோயாளிகள் பிரிவில் உள்ள அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இன்னும், ஓரிரு நாளில் அந்த பெண் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என்றனர்.

1 More update

Next Story