மரம் முறிந்து விழுந்து கடைகள் , மோட்டார் சைக்கிள்கள் சேதம்

அருப்புக்கோட்டையில் மரம் முறிந்து விழுந்ததில் மோட்டார்சைக்கிள்கள், கடைகள் சேதமானது.
மரம் முறிந்து விழுந்து கடைகள் , மோட்டார் சைக்கிள்கள் சேதம்
Published on

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் மரம் முறிந்து விழுந்ததில் மோட்டார்சைக்கிள்கள், கடைகள் சேதமானது.

மரம் முறிந்து விழுந்தது

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் தனியார் பாலிடெக்னிக் முன்பு சுமார் 35 வருடங்கள் பழமையான மரம் ஒன்று இருந்தது. பாலிடெக்னிக் மாணவர்கள் மதிய உணவு இடைவேளையின் போதும், பஸ்சிற்காககவும் இந்த மரத்தின் நிழலில் நிற்பது வழக்கம். இந்தநிலையில் நேற்று திடீரென இந்த மரத்தின் ஒரு பகுதி முழுவதும் முறிந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீதும், கடைகள் மீதும் விழுந்தன.

இதில் 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் போட்டோ ஸ்டூடியோ கடை, பெட்டிக்கடை உள்ளிட்ட 5 கடைகளின் முன்பகுதி சேதமானது. மேலும் மரம் முறிந்து விழுந்த போது மின் கம்பியும் சேர்ந்து அறுந்து விழுந்தது. மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அசம்பாவிதம் தவிர்ப்பு

ஆனால் அதிர்ஷ்டவசமாக மரம் முறிந்து விழுந்த நேரத்தில் அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மின் வாரிய பணியாளர்கள் உடனடியாக மின் வினியோகத்தை நிறுத்தி அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பிகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியும் நடைபெற்றது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் திடீரென மரம் முறிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com