

தென்காசி,
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் பகுதியை சேர்ந்த பனை தொழிலாளி மணிகண்டன். இவர் பனை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்வதாக கூறி நேற்று சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பனை தொழிலாளியை சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
வாக்குவாதத்தின்போது பனை தொழிலாளி தாக்க முற்பட்டதால் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பனை தொழிலாளி தென்காசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், பனை தொழிலாளி தாக்கியதில் காயம் ஏற்பட்டதாக எஸ்ஐ இசக்கி ராஜாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, பனை தொழிலாளியை சாதி பெயரை கூறி எஸ்ஐ இசக்கி ராஜா அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, எஸ்ஐ இசக்கி ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆலங்குளம் பொதுமக்கள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, பனை தொழிலாளி தரப்பில் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்ஐ இசக்கி ராஜா உள்பட 3 போலீசார் ஆலங்குளம் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பனை தொழிலாளி மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இசக்கி ராஜாவை சஸ்பெண்டு நெல்லை சரக டிஐஜி நடவடிக்கை எடுத்துள்ளார்.