எஸ்.ஐ. எழுத்து தேர்வு: திருநெல்வேலியில் 2,016 பேர் எழுதினர்

திருநெல்வேலியில் எஸ்.ஐ. எழுத்து தேர்வு நடைபெற்ற 2 மையங்களில் மாவட்டத்திற்கான சிறப்பு கண்காணிப்பு பொறுப்பாளரான எஸ்.பி. அருளரசு நேரில் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) மூலம் நடத்தப்பட்ட நேரடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழுத்துத் தேர்வு இன்று (21.12.2025) திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள 2 தேர்வு மையங்களில் அமைதியாகவும், எந்த வித குறைகளும் இல்லாமல் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் தேர்வு நடத்துவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற எஸ்.ஐ. எழுத்து தேர்வினை மாவட்டத்திற்கான சிறப்பு கண்காணிப்பு பொறுப்பாளரான எஸ்.பி. அருளரசு (ATS) இரண்டு தேர்வு மையங்களிலும் நேரில் சென்று மேற்பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வழங்கிய வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளின்படி தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமாக அனுமதிக்கப்பட்ட 3,043 விண்ணப்பதாரர்களில் 2,016 பேர் நேரில் தேர்வில் பங்கேற்றனர். இதில் ஆண்கள் 1,423 பேர், பெண்கள் 593 பேர் என மொத்தம் 2,016 பேர் தேர்வு எழுதினர். மீதம் உள்ள 1,027 பேர் தேர்வு எழுதவில்லை.






