மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வெள்ளி வேல் திருட்டு: சாமியார் வேடத்தில் மர்ம ஆசாமி கைவரிசை


மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வெள்ளி வேல் திருட்டு: சாமியார் வேடத்தில் மர்ம ஆசாமி கைவரிசை
x
தினத்தந்தி 3 April 2025 11:21 AM IST (Updated: 3 April 2025 12:58 PM IST)
t-max-icont-min-icon

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள பலத்த பாதுகாப்பையும் மீறி, பட்டப்பகலில் சாமியார் வேடத்தில் வந்து வெள்ளி வேலை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

கோவை, மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப் பெருமானின் 7-வது படை வீடு என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நாளை (4-4-2025) நடைபெற உள்ள நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மருதமலை அடிவாரத்தில் உள்ள வேல் கோட்டம் தியான மண்டபத்தில் முருகனை வேல் ரூபத்தில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதில் மூலவருக்கு முன்பாக சுமார் 2 1/2 அடி உயரமுள்ள வெள்ளியால் செய்யப்பட்ட, சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான வேல் இருந்தது. அங்கே நேற்று (2-2-2025) பிற்பகல் சுமார் 12 மணி அளவில் சாமியார் வேடத்தில் வந்த திருடன் அந்த வேலினை எடுத்துச் செல்லும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது.

நாளை நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்காக காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அந்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி பட்டப் பகலில் மருதமலை தியான மண்டபத்தில் இருந்த வெள்ளி வேலை மர்ம ஆசாமி திருடிச் சென்ற சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுகுறித்து சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றிய வடவள்ளி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, வெள்ளி வேலை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.

1 More update

Next Story