இலங்கை சூழ்நிலை: ராமேசுவரம் கடல் பகுதியில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு

இலங்கையில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் ராமேசுவரம் கடல் பகுதியில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.
இலங்கை சூழ்நிலை: ராமேசுவரம் கடல் பகுதியில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு
Published on

ராமேசுவரம்,

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவி வருகின்றது. அதுபோல் இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இலங்கை சிறைகளில் இருந்து ஏராளமான கைதிகள் தப்பி ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது.

அதுபோல் ராமேசுவரத்திற்கு மிக அருகாமையில் இலங்கை கடல் பகுதி உள்ளதால் ராமேசுவரம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியின் பாதுகாப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கை பகுதியில் இருந்து அகதிகள் மற்றும் அகதிகள் போர்வையில் சிறையிலிருந்து தப்பிய கைதிகள், மர்ம நபர்கள் யாரும் வருவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு சொந்தமான இரண்டு அதிவேக கப்பல்கள் ராமேசுவரம் முதல் தொண்டி வரையிலான இந்திய கடல் எல்லை பகுதியில் கடந்த 2 நாட்களாகவே இரவு பகலாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இதைத் தவிர மண்டபத்திலுள்ள இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான 3 ஹோவர் கிராப்ட் கப்பல்களும், ஒரு அதிவேக கப்பலும் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.இது தவிர உச்சிப்புளி இந்திய கடற்படை விமான தளத்திற்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்களும் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் தாழ்வாக பறந்த படி கடலுக்குள் சந்தேகப்படும்படியான படகுகள் ஏதும் வருகின்றதா? என தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

அதுபோல் ராமேசுவரம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் கடந்த 3 நாட்களாகவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com