சிவகாசி பட்டாசு விபத்து - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகாசி பட்டாசு விபத்து - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
Published on

சிவகாசி,

பட்டாசு விபத்தில் இன்று 4 பேர் உயிரிழந்துள்ளநிலையில், செங்கமலப்பட்டி சுற்று வட்டாரத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி 11 பேரை கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி பகுதியில் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

மருத்துவமனையில் அனுமதி

இந்த சம்பத்தின்போது பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினர் மற்றும் போலீசார் விரைந்தனர். எனினும், இந்த விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் பலியாகினர்.படுகாயமடைந்த மேலும் ஒரு தொழிலாளி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவரும் சிகிச்சை பலனின்றி பலியானார். இதையடுத்து இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்தது.

4 பேர் பலி

இந்நிலையில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது நான்காக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே 3 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பறிமுதல்

இதனிடையே சிவகாசியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். பட்டாசு விபத்தில் 4 பேர் இன்று உயிரிழந்துள்ளநிலையில், செங்கமலப்பட்டி சுற்று வட்டாரத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com