

சென்னை,
கந்த சஷ்டி கவசம் பற்றி அவதூறு பரப்பிய புகாரில் கைதான கருப்பர் கூட்டம் சுரேந்தர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இஸ்லாமிய மதத்தை இழிவுப்படுத்தியதாக கைதான கோபால் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை பாய்ந்தது.
கந்தசஷ்டி கவசம் பற்றி அவதூறு பரப்பி கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டதாக சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த செந்தில்வாசன், ராமாபுரத்தைச் சேர்ந்த சுரேந்தர் உள்பட 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில் செந்தில்வாசனிடம் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.
இதேபோல கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதம் பற்றி சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பியதாக சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த மவுண்ட் கோபால் என்பவரையும், சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் கருப்பர் கூட்டம் சுரேந்தர், மவுன்ட் கோபால் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் 1 ஆண்டு சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று உத்தரவிட்டார். அதன் பேரில் அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.