

சென்னை,
அ.தி.மு.க. கொள்கைபரப்பு துணைச்செயலாளர் நடிகை விந்தியா. இவரை பற்றி சில அவதூறான கருத்துக்களை தெரிவித்து, தி.மு.க. நிர்வாகி குடியாத்தம் குமரன் என்பவர் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டார். இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வக்கீல் ஐ.எஸ்.இன்பதுரை புகார் அளித்தார்.
இதன்படி குமரன் மீது சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு குமரன், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், விந்தியா குறித்து தவறாக எதுவும் பேசவில்லை. தன் மீது தவறாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, குமரனுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என விந்தியா சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, குமரனின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.