

சென்னை,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் காஞ்சிபுரம் மண்டல மேலாளர் மற்றும் தரக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆகிய 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அதாவது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு அரிசி அரைத்துக் கொடுக்கும் தனியார் அரிசி ஆலைகளுடன் கூட்டு சேர்ந்து, பொது வினியோக திட்டத்துக்கு வழங்கப்பட வேண்டிய புதிய அரிசிக்கு பதிலாக 6 ஆயிரம் டன் பழைய பொது வினியோகத்திட்ட அரிசியை வழங்கியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தால் அரைப்பதற்காக வழங்கப்பட்ட நெல்லில் இருந்து கிடைத்த புதிய அரிசியை தனியார் சந்தையில் விற்றுவிட்டு, பழைய ரேஷன் அரிசியை மீண்டும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்துக்கு வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த முறைகேடு 2025-26 'காரீப்' சந்தை பருவத்தில் மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையே நடந்துள்ளது. இது பல மாவட்டங்களில் நடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் அரைக்கும் முக வர்களாக செயல்படும் 4 தனியார் அரிசி ஆலைகள், தங்களுக்கு வழங்கப்பட்ட நெல்லுக்கு பதிலாக ரூ.10.82 கோடி மதிப்புள்ள 6 ஆயிரம் டன் பழைய ரேஷன் அரிசியை வழங்கின.
சமீபத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு விசாரணையின்போது இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் அரைக்கும் முகவர்களாக செயல்படும் 4 தனியார் அரிசி ஆலைகள், புதிய அரிசியை தங்கள் வளாகத்திலேயே வைத்துக்கொண்டு, மேற்கூறிய அளவிலான ரூ.10.82 கோடி மதிப்புள்ள அரிசியை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
எனவே, அரைக்கும் முகவர்களிடம் இருந்து பெறப்பட்ட அரிசியின் தரத்தை சரிபார்க்க வேண்டிய பொறுப்பில் இருந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் மற்றும் தரக்கட்டுப்பாட்டு அலுவலர், அந்த ஆலைகளுடன் கூட்டு சேர்ந்து, பழைய ரேஷன் அரிசியை பெற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் சேமிக்க அனுமதித்ததாக கூறப்படுகிறது.
லஞ்ச ஒழிப்பு விசாரணையின்போது இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து, அந்த 2 அதிகாரிகளையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட 4 அரிசி ஆலை முகவர்களின் ஒப்பந்தங்களையும் ரத்து செய்து, அவர்களை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக நடைபெற்று வரும் துறை ரீதியிலான தொடர் விசாரணையில் மேலும் பலர் சிக்கலாம் என்று கூறப்படுகிறது.