

சென்னை,
இந்தியா முழுவதும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் கடந்த 16-ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. கொரோனா தடுப்பூசி திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தடுப்பூசி செலுத்தும்பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் இதுவரை மொத்தம் எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்ற தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அவ்வ போது வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில்,தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 7,145 பேர் கோவிஷீல்டு தடுப்பு மருந்தும், 162 பேர் கோவேக்சின் தடுப்பு மருந்தும் என மொத்தம் 7,307 மருத்துவ பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
தமிழகத்துக்கு இதுவரை 1 லட்சத்து 70 ஆயிரத்து 100 பேருக்கு செலுத்த தடுப்பு மருந்து டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை 69 ஆயிரத்து 27 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 67 ஆயிரத்து 514 பேர் கோவிஷீல்டு மருந்தும், 1,701 கோவேக்சின் மருந்தும் செலுத்தி உள்ளனர். இது 40.58 சதவீதம் ஆகும்.