

சென்னை,
கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் கடந்த மாதம் 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் மற்றும் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனங்களின் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் என சுமார் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கிய இந்த திட்டம் மூலம் தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
தமிழகத்தில் நேற்று 657 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 21 ஆயிரத்து 645 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அந்தவகையில் 21 ஆயிரத்து 208 பேர் கோவிஷீல்டு தடுப்பு மருந்தும், 437 பேர் கோவேக்சின் தடுப்பு மருந்தும் போட்டுள்ளனர். அதில் 17 ஆயிரத்து 863 பேர் முதல் முறையாகவும், 3 ஆயிரத்து 782 பேர் 2-வது முறையாகவும் தடுப்பூசி போட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 69 ஆயிரத்து 17 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதுவரை 4 ஆயிரத்து 936 பேர் 2-வது முறை தடுப்பூசி போட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.