இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் சோப்புகள் பறிமுதல்!

ரூ.5 லட்சம் மதிப்பிலான சோப்புகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் சோப்புகள் பறிமுதல்!
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகப் பகுதியில் இருந்து இலங்கைக்குப் பொருட்கள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு திரேஸ்புரம் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இரவு சுமார் 9.15 மணியளவில், திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தின் வடக்குப் பகுதியில் உள்ள வாடையில், ஒரு ஃபைபர் படகில் சிலர் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீசார் அங்கு விரைந்ததும், கடத்தல்காரர்கள் இருட்டைப் பயன்படுத்தி தப்பி ஓடினர்.

பின்னர் போலீசார் மேற்கொண்ட சோதனையில், பதிவு எண் இல்லாத இரண்டு என்ஜின்கள் பொருத்தப்பட்ட அதிவேக ஃபைபர் படகு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், படகில் இலங்கைக்குக் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 5 அட்டைப் பெட்டிகளில் இருந்து 1200 “நேச்சர் பவர் பப்பாளி சோப்”கள் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட சோப்புகளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். தப்பி ஓடிய கடத்தல்காரர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் படகு குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com