

தூத்துக்குடி,
கோவில்பட்டியில் நடைபாதை, சாலையோர ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றாத நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளைக் கண்டித்து, சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் மொட்டையடித்து, சங்கு ஊதி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதிகளில் முக்கிய நடைபாதை மற்றும் சாலை ஒரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி அலுவலகங்களில் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை மனுக்களை அளித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகளால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட போதிலும், பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து உயிரிழப்புகளும், தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றாமல் அலட்சியம் காட்டி வரும் அதிகாரிகளை கண்டித்து கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் மற்றும் பயணியர் விடுதி முன்பு சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் மொட்டையடித்து, சங்கு ஊதி நூதன போராட்டம் நடத்தினர். நகராட்சி அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர் கந்தவேல் என்பவரும், பயணியர் விடுதி முன்பு முருகன் என்பவரும் மொட்டையடித்துக்கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
தொடர்ந்து கோரிக்கை மனுவை கோவில்பட்டி நகராட்சி பொறுப்பு பொறியாளர் சணல்குமாரிடமும், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகத்திலும் வழங்கினர். நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் மனு அளிக்கும் போது, உதவி கோட்டப் பொறியாளர் ரத்தினபாபுவிற்கும் சமூக ஆர்வலர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு சலசலப்பு நிலவியது. பின்னர் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.