தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன் என கூறி அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ம் நாள் சமூக நீதி நாள் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு நேற்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் முன்னிலையில், தூத்துக்குடி தலைமையிடத்து ஏ.டி.எஸ்.பி. ஆறுமுகம் உள்பட காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் மாவட்ட காவல் அமைப்பு பணி நிர்வாக அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஆகியோரால் பின்வருமாறு சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
அப்போது, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன். சுயமரியாதை ஆளுமைத் திறனும், பகுத்தறிவு பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்.
சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன். மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்.” என்று உறுதி மொழி அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.






