மின்வெட்டு ஏற்படுத்த சிலர் சதி செய்கின்றனர்: அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

மின்வெட்டு ஏற்படும் இடங்களில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு ஏற்படுத்த சிலர் சதி செய்கின்றனர்: அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு
Published on

சென்னை,

சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மின்வெட்டு எதனால் ஏற்படுகிறது, எவ்வளவு நேரத்தில் சரி செய்யப்படுகிறது என்பதை வெளிப்படையாக தெரிவிக்கிறோம். மின்வெட்டு ஏற்படுத்த தனி நபர்கள் சிலர் சதி செய்கின்றனர். வேண்டுமென்றே ஏற்படுத்தப்படும் மின்வெட்டுகள் குறித்தும் கண்காணித்து வருகிறோம். சில இடங்களில் பியூஸ் கேரியர் திருடப்பட்டு உள்ளது.

மின்வெட்டு பிரச்சினை உடனுக்குடன் சரி செய்யப்படுகிறது. போராட்டம் நடத்த மக்களை சிலர் தூண்டுகின்றனர். சோலார் மின் உற்பத்தியில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு பின்தங்கி உள்ளது. சோலார் மின் உற்பத்தியை அதிகரிக்க அடுத்த 2 வாரங்களில் புதிய கொள்கை கொண்டு வரப்படும். மின்சாரத்துறை கட்டமைப்பு போதுமானதாக இல்லை. தமிழகத்தில் எங்கெங்கு மின்வெட்டு ஏற்படுகிறது என்பது குறித்து மக்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தப்படுகிறது.

பெரம்பூரில் மின்தடை ஏற்பட்ட 40 நிமிடங்களில் சரி செய்து மின் வினியோகம் கொடுக்கப்பட்டது. ஆனால் இரவு முழுவதும் மின் வினியோகம் இல்லை எவன்பது போல தகவல்களை பரப்பினார்கள். வடசென்னையில் மின்வெட்டை கண்காணித்து சரிசெய்ய கூடுதலாக ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

மின்தடை ஏற்பட்டால் முடிந்த வரை விரைவாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்கள் மூலமாக வரும் மின்வினியோகம் தொடர்பான குறைபாடுகள் சரி செய்யப்படுகின்றன. இரவு நேரங்களில் மின் வினியோகம் தொடர்பான குறைகளை சரி செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com