

சென்னை,
சென்னை பெருங்குடியில் தேர்வு தோல்வியை தட்டிக் கேட்ட தாயை அடித்துக் கொன்ற பிளஸ் 2 மாணவனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவர் ஒருவர் சமீபத்தில் வெளியான பொதுத்தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய், மகனைத் தொடர்ந்து கண்டித்து வந்தார். தேர்வு எழுதாமல் சரியாகப் படிக்காதது குறித்தும், எதிர்காலம் குறித்தும் தாய் தட்டிக் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு நேரத்தில் தந்தை வீட்டில் இல்லாத சமயம் பார்த்து, தூங்கிக் கொண்டிருந்த தாயின் மீது மகன் திடீரென தாக்குதல் நடத்தினார். ஆத்திரத்தில் தாயின் கழுத்தை நெரித்ததோடு மட்டுமன்றி, கத்தியால் குத்தியும், வீட்டிலிருந்த கல்லால் தலையில் அடித்தும் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தாயின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தாயைக் கொலை செய்த மகனைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், கொலை செய்த இளைஞர் கடந்த சில மாதங்களாக மனநலப் பாதிப்பிற்கு உள்ளாகி, அதற்கான சிகிச்சையில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.