மதுபோதையில் தகராறு செய்த மகன்; அடித்துக் கொன்று, வீட்டின் அருகே புதைத்த தாய்

மகன் இறந்ததைத் தொடர்ந்து, வீட்டின் அருகே கழிவறைக்காகத் தோண்டப்பட்டிருந்த குழியில் ராஜாவின் உடலைத் தூக்கிப் போட்டு ஐயம்மாள் புதைத்துள்ளார்.
தாயே, மகனை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்தார்.
தாய் ஐயம்மாள்
Published on

மதுரை,

"தினமும் போதையில் வந்து சித்திரவதை செய்ததால், என் கைகளாலேயே என் மகனை அடித்துக் கொன்று புதைத்துவிட்டேன்" என்று மதுரையைச் சேர்ந்த தாய் ஒருவர் கிராம நிர்வாக அலுவலரிடம் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போதை பழக்கம்

மதுரை மாவட்டம் வரிச்சியூர் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஐயம்மாள். இவருடைய மகன் ராஜா (வயது 32). ராஜாவுக்குத் தீவிர மது மற்றும் போதைப்பொருள் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவரது மனைவியும் குழந்தைகளும் அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டனர். மேலும், ராஜா மீது பல்வேறு குற்ற வழக்குகளும் நிலுவையில் இருந்துள்ளன.

இரும்புக் கம்பியால் அடித்துக்கொலை

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ராஜா கடுமையான போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். மேலும், தனது தாய் ஐயம்மாளிடம் பணம் கேட்டு மிரட்டி, அவரைத் தகாத முறையில் நடத்த முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஐயம்மாள், தற்காப்பிற்காக மகனை கீழே தள்ளிவிட்டு, அருகில் கிடந்த இரும்பு கம்பியால் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் ராஜா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

மறைக்கப்பட்ட உடல்

மகன் இறந்ததைத் தொடர்ந்து, வீட்டின் அருகே கழிவறைக்காகத் தோண்டப்பட்டிருந்த குழியில் ராஜாவின் உடலைத் தூக்கிப் போட்டு ஐயம்மாள் புதைத்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த ரத்தக் கறைகளையும் அடியோடு துடைத்துச் சுத்தப்படுத்தியுள்ளார்.

ரகசியக் கண்காணிப்பு

சில மாதங்களாக மகன் காணவில்லை என்று நாடகமாடி வந்தார். இந்த நிலையில் போலீசாரின் ரகசியக் கண்காணிப்பு மற்றும் கிராம மக்களின் சந்தேகத்தைத் தொடர்ந்து, மன உளைச்சலுக்கு ஆளான அவர் நேற்று (புதன்கிழமை) கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்து உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com