

சென்னை,
மறைமலை அடிகளின் மகன் மறை.பச்சையப்பன் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இறுதிச்சடங்குக்கு அரசு உதவ அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புகழ்பெற்ற தமிழறிஞர்களில் முக்கியமானவர் மறைமலை அடிகள். 1876 - 1950 காலக்கட்டத்தில் வாழ்ந்த இவர், தமிழுக்காகவும், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டார்.
அவருடைய மகன் மறை.பச்சையப்பன் (வயது 78) உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். எலும்பு சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர், அங்குள்ள எலும்பியல் வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.
தந்தை மறைமலை அடிகள் தமிழறிஞராக புகழ்பெற்ற போதும், மறை. பச்சையப்பன் சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
அவரை மகள் லலிதா, மகன் சிவகுமார் ஆகியோர் கவனித்து வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் மறை.பச்சையப்பன் இன்று உயிரிழந்தார். ஏற்கனவே, அவரது உயர் சிகிச்சைக்கு உதவி கோரிய அவரது குடும்பத்தினர், தற்போது அவரது இறுதிச்சடங்கு செய்வதற்குகூட பணம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். எனவே, உரிய உதவியை அரசு செய்துதர அவருடைய குடும்பத்தினரின் கோரிக்கை விடுத்துள்ளனர்.