சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை

சென்னையில் உன்னை சாகடித்தால்தான் எனக்கு சொத்து கிடைக்கும் எனக்கூறி வீட்டில் இருந்த தந்தையை, மகன் இரும்பு ராடால் கொடூரமாக தாக்கி கொலை செய்தார்.
சென்னை வில்லிவாக்கம் ராஜமங்கலம் 6-வது தெருவை சேர்ந்தவர் மதுசூதன் (வயது 60). இவரது மகன் ஜார்ஜ்புஷ்(32). இவர் தனது தந்தையிடம் சொத்தை பிரித்து தருமாறு அடிக்கடி கேட்டு தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 19.3.2024 அன்று தந்தையிடம் அவர் மீண்டும் தகராறு செய்தார்.
உன்னை சாகடித்தால்தான் எனக்கு சொத்து கிடைக்கும் எனக்கூறி வீட்டில் இருந்த மதுசூதனனை, ஜார்ஜ்புஷ் இரும்பு ராடால் கொடூரமாக தாக்கி கொலை செய்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கொளத்தூர் வி.4 ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜார்ஜ்புஷ்சை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இறுதிக்கட்ட விசாரணைக்கு பின் நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு வழங்கினார். இதில் தந்தையை கொன்ற மகன் ஜார்ஜ்புஷ்க்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தேவராஜன் ஆஜராகி வாதாடினார்.






