ஆடல், பாடல் நிகழ்ச்சி - கடுமையான நிபந்தனைகளை விதித்த மதுரை ஐகோர்ட் கிளை

ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு கடுமையான கடுமையான நிபந்தனைகளுடன் மதுரை ஐகோர்ட் கிளை அனுமதி வழங்கியுள்ளது.
ஆடல், பாடல் நிகழ்ச்சி - கடுமையான நிபந்தனைகளை விதித்த மதுரை ஐகோர்ட் கிளை
Published on

மதுரை,

திருச்சி, மணப்பாறை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல ஊர்களைச் சேர்ந்த விழா குழுவினர் சார்பில், கோவில் திருவிழாக்களில் இரவு நேர ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ அல்லது அநாகரீகமான உரையாடல்களோ இருக்கக் கூடாது. எந்த ஒரு அரசியல் கட்சி, மதம், சமூகம் அல்லது சாதியை குறிப்பிடும் வகையில் பாடல்களோ அல்லது நடனமோ இருக்கக் கூடாது.

எந்த ஒரு அரசியல் கட்சி, மதம், சாதிக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ பிளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது. சாதி அடிப்படையில் பாகுபாடுகள் இருக்கக் கூடாது. இரட்டை அர்த்த பாடல்கள் இடம்பெறக் கூடாது. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குட்கா போன்ற பொருட்களையோ, மதுபானத்தையோ உட்கொள்ளக் கூடாது.

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்தவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது. நிகழ்ச்சிகளை மாலை 7 மணி இரவு 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும்" என்பன உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளுடன் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு மதுரை ஐகோர்ட் கிளை அனுமதி வழங்கியுள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com