மகன்கள் கைவிட்டதாக புகார்; கோட்டை முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணின் கண்ணீரை துடைத்த போலீசார்

மகன்கள் கைவிட்டதாக புகார் கூறி, கோட்டை முன்பு தீக்குளித்து உயிரைவிட முயன்ற விதவைப்பெண்ணின் கண்ணீரை துடைத்து போலீசார் காப்பாற்றினார்கள்.
மகன்கள் கைவிட்டதாக புகார்; கோட்டை முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணின் கண்ணீரை துடைத்த போலீசார்
Published on

சென்னை கொடுங்கையூர் ராஜீவ்காந்தி நகரை சேர்தவர் இன்பவள்ளி (வயது 54). கணவரை இழந்த விதவைப்பெண். இவர் நேற்று காலை சென்னை கோட்டைக்கு வந்தார். திடீரென்று தலையில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். கோட்டை முன்பு காவலுக்கு நின்ற போலீசார், இன்பவள்ளியை காப்பாற்றினார்கள். பின்னர் அவரை கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். போலீஸ் விசாரணையில் இன்பவள்ளி தனது கண்ணீர் கதையைச் சொன்னார்.

தனக்கு 2 மகன்கள். தனது கணவர் பெயரில் வீடு உள்ளது. தன்னிடம் இருந்த ரூ.1 லட்சம் பணம் மற்றும் 3 பவுன் தங்க நகையை ஒரு மகன் வாங்கிக்கொண்டான். தற்போது வீட்டையும் அவன் பெயருக்கு எழுதிக்கேட்டு மிரட்டுகிறான். அதோடு எனக்கு சாப்பாடு எதுவும் தராமல் தெருவில் நிறுத்திவிட்டான். எனது பணம், நகையை வாங்கிக்கொடுக்க வேண்டும் இதுதான் இன்பவள்ளியின் கோரிக்கை.

இன்பவள்ளியின் மகன்கள் இருவரையும், உதவி போலீஸ் கமிஷனர் வீரக்குமார் நேரில் வரவழைத்தார். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிவில், மகன்கள் தாயார் இன்பவள்ளியை இனிமேல் நன்கு பார்த்துக்கொள்வதாக வாக்களித்தனர். ஒரு மகன் மாதம் ரூ.1,500 தாயாருக்கு கொடுப்பதாக கூறினார். பிரச்சினைக்குரிய மகன் தாயாரை தன்னுடன் வைத்துக்கொள்வதாக ஒப்புக்கொண்டார். பின்னர் மகன்கள் இருவருடன் இன்பவள்ளி சந்தோசமாக புறப்பட்டு சென்றார். தனது கண்ணீரை துடைத்து தன்னை காப்பாற்றிய போலீசாருக்கு இன்பவள்ளி நன்றி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com