

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. மதன் தலைமையில் நேற்று மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை, நிலுவையில் உள்ள வழக்குகள், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது, நீதிமன்ற அலுவல்கள், பல்வேறு நிகழ்வுகள் மற்றும் தேர்தல் பாதுகாப்பு பணிகள் ஆகியவை குறித்து ஆய்வு நடைபெற்றது.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் சிப்காட் காவல் நிலைய செயின் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை உடனடியாக கைது செய்து நகைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் உட்பட தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 48 காவல் துறையினருக்கு மாவட்ட எஸ்.பி. மதன் நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஏ.டி.எஸ்.பி.க்கள் ஆறுமுகம், தீபு மற்றும் டி.எஸ்.பி.க்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.