திருநெல்வேலியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மாவட்ட காவல்துறையின் வாகனங்களை எஸ்.பி. சிலம்பரசன் ஆய்வு செய்தார்.
திருநெல்வேலியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு
Published on

திருநெல்வேலி மாவட்டத்தில் ஏ.எஸ்.பி., டி.எஸ்.பி.க்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.

அதற்கு முன்னதாக திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மாவட்ட காவல்துறையின் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் காவலர்கள் அவசர காலங்களில் பணிக்கு செல்லும் இருசக்கர வாகனங்கள், உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்கள், நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறதா என எஸ்.பி. சிலம்பரசன் ஆய்வு மேற்கொண்டு வாகன ஓட்டுநர்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கி, வாகனங்களின் நிறை குறைகளை கேட்டு தெரிந்து கொண்டார்.

பின்பு மாவட்டத்தில் கொலை, திருட்டு மற்றும் போக்சோ வழக்குகளில் உள்ள சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த காவல் அதிகாரிகள், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட நபர்களை திறம்பட செயல்பட்டு கைது செய்தது போன்ற செயல்களில் ஈடுபட்ட போலீசார் மற்றும் அரசு வழக்குரைஞர்கள் உட்பட மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 200 பேரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி.க்கள், அரசு வழக்குரைஞர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com