

சென்னை,
மே தினம், மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு வரும் 30-ந்தேதி 475 பேருந்துகளும், மே 1, 2 ஆகிய தேதிகளில் 315 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, பெங்களூரு போன்ற இடங்களுக்கு வரும் 30-ந்தேதி முதல் 1-ந்தேதி வரை 160 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து தலா 14 பேருந்துகளும், ஈரோடு மற்றும் கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் ஞாயிற்றுக்கிழமை (மே 3-ந்தேதி) மீண்டும் ஊர் திரும்ப வசதியாக அனைத்து இடங்களில் இருந்தும் 615 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 27,000-க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பயணிகள் www.tnstc.in இணையதளம் மற்றும் Mobile செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.