தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு வழிபாடு: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, 3-ம் நாள் உயிர்த்தெழுந்த நிகழ்வை நினைவு கூரும் ஈஸ்டர் திருநாளையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு வழிபாடு: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
Published on

தூத்துக்குடி,

இயேசுவின் சிலுவைப்பாடுகளையும் தியாகத்தையும் நினைவுகூரும் வகையில், கிறிஸ்தவர்கள் கடந்த 40 நாட்களாகத் தவக்காலத்தைக் கடைப்பிடித்து வந்தனர். இதன் உச்சகட்ட நிகழ்வாக, சனிக்கிழமை நள்ளிரவு முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு வழிபாடுகள் தொடங்கின.

தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் லூர்து அன்னை ஆலயத்தில் இயேசுபிரான் உயிர்த்தெழும் நிகழ்வு தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பங்குத்தந்தை செல்வன் பர்ணாந்து தலைமையில் அருட்தந்தையர்கள் அமலன் தமியான் மற்றும் ஜேசுராஜ் முன்னிலையில் நள்ளிரவில் ஆடம்பர கூட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்த வழிபாட்டில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான மக்கள், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி ஊர்வலமாகச் சென்றனர்.

குறிப்பாக இஸ்ரேல்-ஈரான் போர் உள்ளிட்ட உலகளாவிய மோதல்கள் முடிவுக்கு வந்து உலக அமைதி நிலவ வேண்டும் என்று உருக்கமாகப் பிரார்த்தனை செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை செல்வன் பர்ணாந்து தலைமையில், லூர்து அன்னை இளைஞர் இயக்கம், பங்கு மேய்ப்புப் பேரவை உறுப்பினர்கள், அன்பியங்கள், அருள் சகோதரிகள் மற்றும் இறைமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

இதேபோல் உலகப்புகழ் பெற்ற தூய பனிமய மாதா பேராலயம், திரு இருதய பேராலயம், அந்தோணியார் கோவில் ஆலயம், இன்னாசியர் ஆலயம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து கத்தோலிக்க மற்றும் சி.எஸ்.ஐ ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலிகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் ஈஸ்டர் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com