மாற்றுத்திறனாளிகளுக்கான 1,200 பணியிடங்களை நிரப்ப சிறப்பு தேர்வு - அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான 1,200 பணியிடங்களை நிரப்ப சிறப்பு தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 4வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டசபை உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது 2 ஆண்டுகள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றிய மாற்றுதிறனாளிகளை பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்கப்படும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவு முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்று தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கீதா ஜீவன், இந்த அரசாணையை மறு ஆய்வு செய்து மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக 1,200 பணியிடம் கண்டறியப்பட்டு விரைவாக சிறப்பு தேர்வு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடருக்குள்ளாக தேர்வு தேதியை அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி பணி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.






