

சென்னை,
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் வருகிற 29-ந்தேதி கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரி பார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் கை ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.21% eKYC பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த eKYC பதிவினை 100 சதவீதம் நிறைவு செய்யும்பொருட்டு 29.08.2026 அன்று தமிழகத்திலுள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் சிறப்பு முகாம் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
எனவே, இன்று வரை, ரேசன் கடைகள் மூலம் கை ரேகைப் பதிவு (eKYC) செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் வருகின்ற 29.08.2026 அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி தங்களது கை ரேகைப் பதிவினை (eKYC பதிவினை) மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.