

மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான பேர் கலந்து கொண்டனர்.
புனித வெள்ளி
புனித வெள்ளியை முன்னிட்டு விருதுநகரில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவு கூறும் வகையில் நேற்று அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. காலையில் இயேசு கிறிஸ்துவின் 14 பாடுகளை தியானிக்கும் சிலுவைப்பாதை வழிபாடுகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலி மற்றும் மறையுரை நடைபெற்றது. விருதுநகரில் உள்ள தூய இன்னாசியார் ஆலயத்தில் விருதுநகர் மறைவட்ட அதிபரும் பங்குத்தந்தையுமான அருள்ராயன் அடிகளார், துணை பங்குத் தந்தை சகாய ஜான் பிரிட்டோ அடிகளார் தலைமையில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடுகள், திருப்பலி மற்றும் மறையுரை நடைபெற்றது.
தாயில்பட்டி
அதேபோல விருதுநகர் பாண்டியன் நகர் தூய சவேரியா ஆலயம், விருதுநகர் நிறைவாழ்வு நகர் தூய ஜெபமாலை ஆலயம், ஆர்.ஆர். நகர் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயம், சிவகாசி லூர்து அன்னை ஆலயம், திருத்தங்கல் புனித அந்தோணியார் ஆலயம், சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் குழந்தை இயேசு ஆலயம் ஆகியவற்றில் புனித வெள்ளி சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான பேர் பங்கேற்றனர்.
தாயில்பட்டி புனித தோமா தேவாலயம்,. அசெம்பிளி ஆப்காட் சபை மற்றும் ஆர்.சி. சபை, கங்கர கோட்டை ஊராட்சியைசேர்ந்த அன்பின் நகரம் தேவாலயம், ஏழாயிரம் பண்ணை, பனையடிப்பட்டி, வெற்றிலையூரணி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள தேவாலயங்களில் ஜெபக்கூட்டம் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டைசி.எஸ்.ஐ. இமானுவேல் தேவாலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு ஆராதானை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளைசெயலாளர் செல்லப்பாண்டியன், பொருளாளர் நெல்சன் துரைராஜ் ஆகியோர் செய்திருந்தனர். சிறப்பு ஆராதனையில் ஆயிரக்கணக்கான பேர் கலந்து கொண்டனர்.