

சென்னை,
தமிழக விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி இழப்பீட்டுக்கான சிறப்பு தொகுப்பை உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக, தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி காவிரி நீரை கர்நாடக அரசு உரிய நேரத்தில் திறக்காததால் தமிழகம் முழுவதும் சுமார் 7 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெறவில்லை, வாழ்வாதாரத்தை இழந்து வாடும் விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த குறுவை சாகுபடி இழப்பீட்டுக்கான ரூ.134.83 கோடி சிறப்புத் தொகுப்பை உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக விவசாயிகளின் நியாயமான எதிர்பார்ப்பை கர்நாடகாவில் பெய்த தொடர் மழையின் மூலம் இயற்கை அண்ணையே பிரதிபலித்திருக்கிறது.
நம்முடைய தண்ணீர் உரிமையை, காவிரி மேலேண்மை ஆணையத்தின் உத்தரவை மறுத்து வருகிறது கர்நாடக அரசு. கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் 12.48 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நடைபெற்ற சாகுபடியானது நடப்பு ஆண்டில் தண்ணீர் பற்றாக்குறையால் 5.32 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது. சுமார் 7 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய முடியவில்லை.
குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் 5.32 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெறும் வேளையில் நடப்பு ஆண்டில் தண்ணீர் பற்றாக்குறையால் 4.39 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றது. சுமார் 1 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை. அதாவது காவிரி நீரை கர்நாடகா திறக்காததால், தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு குறுவை சாகுபடி சுமார் 7 லட்சம் ஏக்கர் பரப்பளவு வரை குறைந்துள்ளது.
இதனையெல்லாம் கர்நாடக அரசு கவனத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக முடிவு எடுத்து தமிழக விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நீடிக்கக்கூடாது என்பது தான் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. காவிரி நதிநீர் உடன்பாடு, மேகதாது அணைத்திட்டம் ஆகியவற்றில் தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு தமிழக விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும். காவிரி நதிநீர் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடுவது சரியான அணுகுமுறையாக அமைகிறது என த.மா.கா(மூ) கருதுகிறது.
குறுவை சாகுபடி பாதித்த விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.134.83 கோடி சிறப்புத் தொகுப்பை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.