மசோதாக்களை திருப்பி அனுப்பிய கவர்னர்! தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம் இன்று கூடுகிறது

சட்டசபையின் சிறப்புக் கூட்டம் 18-ந் தேதி (இன்று) காலை 10 மணிக்கு கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
மசோதாக்களை திருப்பி அனுப்பிய கவர்னர்! தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம் இன்று கூடுகிறது
Published on

சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. குறிப்பாக தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

குறிப்பாக பண மசோதா தவிர பல்வேறு மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. மாறாக, அவற்றை அரசிடமே அவர் திருப்பி அனுப்பி வைக்கிறார். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் கவர்னருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது. மனு மீது சமீபத்தில் நடந்த விசாரணையின்போது, கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து, வழக்கின் அடுத்த விசாரணையை 20-ந் தேதிக்கு தள்ளி வைத்தது. இந்த நிலையில், தமிழக அரசு ஏற்கனவே சட்டசபையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த 10 சட்ட மசோதாக்களை அரசிடமே 2 நாட்களுக்கு முன்பு கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இது தமிழக அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்க அரசு முடிவு செய்தது. அதற்காக சட்டசபையை உடனடியாக கூட்டுவதாக அறிவிக்கப்பட்டது. சட்டசபையின் சிறப்புக் கூட்டம் 18-ந் தேதி (இன்று) காலை 10 மணிக்கு கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அதன்படி இன்று சட்டசபையின் சிறப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

கவர்னர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களும் உயர் கல்வி சம்பந்தப்பட்ட மசோதாக்கள் ஆகும். பெரும்பாலான மசோதாக்கள், பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தை அரசே செய்யும் வகையிலான திருத்தத்தை மேற்கொள்வதாக உள்ளது. இதில் மருத்துவ பல்கலைக்கழகம், கால்நடை பல்கலைக்கழகம், வேளாண்மை பல்கலைக்கழகம், மீன்வள பல்கலைக்கழகம் ஆகியவையும் உள்ளன. அந்தந்த துறையின் அமைச்சர்கள் அந்த மசோதாக்களை அவையில் அறிமுகம் செய்வார்கள். அந்த மசோதாவை ஆட்சேபிக்கும் கட்சியினர் அப்போது தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்கள். பின்னர் அதை இன்றே ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதற்கு அமைச்சர்கள் கோருவார்கள். ஆட்சேபனை இருந்தால் அந்த மசோதாக்கள் மீது விவாதம் நடைபெறும்.

அந்த விவாதத்திற்கு அமைச்சர் பதிலளிப்பார். பின்னர் அந்த மசோதாக்களை எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்பிற்கு சபாநாயகர் விடுவார். பெரும்பான்மை குரல் வாக்கெடுப்பின் மூலம் அந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும். இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் அலுவல் தவிர, வேறு புதிய மசோதாக்கள், அரசினர் தீர்மானங்கள் தாக்கல் செய்யப்படலாம். அப்படி தாக்கல் செய்யப்பட்டால், அதன் மீதும் கட்சிகள் சார்பில் விவாதங்கள் நடைபெறும். எனவே இந்த சட்டசபை சிறப்புக் கூட்டம் அரசியல் ரீதியாக மிகுந்த பரபரப்பை ஏற்படுத்துவதாக இருக்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com