

திருச்சி,
ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருவனந்தபுரம்-தாம்பரம் இடையே திருச்சி வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. வண்டி எண்: 06110 திருவனந்தபுரம் சென்ட்ரல்-தாம்பரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகஸ்டு மாதம் 12, 19, 26-ந் தேதிகளில் மற்றும் செப்டம்பர் 2-ந் தேதி (புதன்கிழமைகளில்) திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு தாம்பரத்தை சென்று அடையும்.
இந்த ரெயில் மறுமார்க்கத்தில் வண்டிஎண் 06109 தாம்பரம்-திருவனந்தபுரம் சென்டரல் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகஸ்டு மாதம் 13, 20, 27-ந் தேதி களில் மற்றும் செப்டம்பர் 3-ந் தேதி (வியாழக்கிழமைகளில்) தாம்பரத்தில் இருந்து பகல் 2 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.15 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் ரெயில் நிலையத்தை சென்று அடையும்.
இந்த ரெயில் வர்கலா, கொல்லம், செங்கோட்டை, தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விருதாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் செல்லும். மறுமார்க்கத்திலும் இதே வழித்தடம் வழியாக திருவனந்தபுரம் சென்ட்ரல் சென்று அடையும். இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.