

திருச்சி,
பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்தது. அதேபோல், தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னை செல்ல சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை இன்றுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, சொந்த ஊர் சென்ற பொதுமக்கள், மீண்டும் திரும்பும் வகையில் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று இரவு 10 மணிக்கு மண்டபத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு விரைவு ரெயில் (வண்டி எண்: 06048) இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் ராமநாதபுரம், பரமகுடி, மானாமதுரை, சிவகங்கை, கல்லல், காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவணம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.