முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பங்குனி உத்திரத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு, பூஜை நடந்தது.
முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
Published on

பால்குட ஊர்வலம்

தைப்பூசம், திருக்கார்த்திகை நாட்களை போன்று பங்குனி உத்திரத்தன்று முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி திண்டுக்கல் வடக்கு மேட்டுராஜக்காபட்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று தொடங்கியது.

இதையொட்டி காலை 7 மணியளவில் ஊத்துக்கேணி தெப்பத்தில் இருந்து பால்குடம் எடுத்து சன்னதி வந்து சேரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். அதன்பிறகு சுவாமி சுப்பிரமணியருக்கு பால், பழம், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடந்தது.

இதைத்தொடர்ந்து மாலை 6 மணியளவில் உப்புகேணி விநாயகருக்கு பூஜை, அய்யப்பன் மணி மண்டபத்தில் சிறப்பு வழிபாடு, மூலவருக்கு ராஜ அலங்காரம் நடைபெற்றது. இரவு 7 மணியளவில் மின் தேரில் சுவாமி ஊர்வலம் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தது. இன்று (வியாழக்கிழமை) ஊஞ்சல் உற்சவமும், நாளை (வெள்ளிக்கிழமை) தெப்ப உற்சவத்தில் சுவாமி சரவண பொய்கையில் காட்சியளித்தல் அலங்காரமும் நடக்கிறது.

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில்

இதேபோல் திண்டுக்கல் மலையடிவாரம் கந்தக்கோட்டம் தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத முருகன், ரெயிலடி சித்தி விநாயகர் கோவிலில் உள்ள சுப்பிரமணியர், என்.ஜி.ஓ. காலனி முருகன் கோவில், நந்தவனப்பட்டி முருகன் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருமலைக்கேணி முருகன் கோவில்

திண்டுக்கல் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பவுர்ணமி மற்றும் பங்குனி உத்திரத்தையொட்டி முருகனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி உள்பட 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டது. ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து முருகப்பெருமான் பல்லக்கில் கோவிலின் கிரிவலப்பாதையில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் கோபால்பட்டி கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் கோவில், வேம்பார்பட்டி விசுவநாதர் கோவில், சாமிநாதபுரம் பாலமுருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com